Wednesday 4 September 2013

பூர்ணக் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
 அரிசி மாவு - 1/4 கிலோ
வெல்லம் (உருண்டை வெள்ளம்) - 1/2 கப்
அவல் - 1 கைப்பிடி
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 2 சிட்டிகை

செய்முறை:
மேல் மாவு செய்ய:
பச்சரிசியை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து நன்றாக கழுவி வடிகட்டி விடவும். பிறகு இதை ஒரு துணியில் உலர்த்தி நிழலில் காய வைக்க வேண்டும். அரிசி காய்ந்தவுடன் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

பிறகு அரைத்த மாவை வெறும் வாணலியில் ஓரளவிற்கு வறுத்துக் கொண்டு சல்லடையில் சலித்துக் கொள்ளவும். அல்லது அரைத்த மாவை ஆவியில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுத்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும். இவ்வாறு சலிக்காவிட்டால் மாவு சிறு சிறு கட்டியாகி விடும்.

 அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எண்ணெய் சேர்த்து, அதனுடன் மிதமான சுடு தண்ணீரை தேவையான அளவு சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.வாணலியில் தேங்காய் துருவலைக் கொட்டி நன்றாக வறுத்துக் கொள்ளவும். அவலை தண்ணீரில் கொட்டி சிறிது நேரம் கழித்து தண்ணீரை பிழிது எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


பிறகு வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்து பாகாக உருகியவுடன், வறுத்த தேங்காய் துருவலையும், பிழிந்து வைத்த அவலையும், ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பாகு கொஞ்சம் கெட்டியாக வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

கொழுக்கட்டை செய்ய:

ஒரு வாழை இலை (அல்லது) பாலிதீன் பேப்பர் எடுத்து அதன் மீது 
சிறிது எண்ணெய் தடவி (அரிசி மாவைத் தட்டினால் மாவு ஒட்டாமல் எடுக்க வரும்) ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு அரிசி மாவை எடுத்து மெல்லியதாக வட்டமாக தட்டிக் கொள்ளவும்.

தட்டிய மாவில் செய்து வைத்த தேங்காய் உள்ளடத்தை (பூர்ணத்தை) ஒரு தேக்கரண்டி வைத்து இரண்டாக மடித்து, உள்ளடம் வெளியில் வராதவாறு ஓரத்தில் நன்றாக அழுத்தி விடவும்.

இவ்வாறு தயாரித்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் ஆவியில் வேக வைத்து, சிறிது நேரம் சுமார் ஐந்து நிமிடம் கழித்து எடுத்து சூடாகப் பரிமாறலாம்.

கவனிக்க வேண்டியவை:

அரிசி மாவை இரண்டாக மடிக்கும் போது வாழை இலை அல்லது பாலிதீன் பேப்பரோடு சேர்த்து மடித்தால் சுலபமாக வரும். அரிசி மாவை மிகவும் மெல்லியதாக தட்டினால் ஓட்டையாகி விடும்.